Sunday, April 26, 2009

1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.



சென்ற வாரம், தற்செயலாக ஒரு நல்ல பாம்பு திருச்சியில் உள்ள எங்கள் வீட்டின் குளியலறையில் புகுந்து விட்டது (வெயில் காலத்தில் அதிக வெப்பதிற்காக குளிக்க வந்ததோ என்னமோ தெரிய வில்லை). இது எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. இதை பார்த்த எங்கள் வீட்டின் பின்புறம் உள்ளவர்கள் என் அம்மாவிடம் சொல்ல , அவர் பதறி போய் வீட்டில் கதவை எல்லாம் அடைத்து விட்டு எங்களுடைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.



அவர்கள் குளியலறையில் எல்லா இடத்தையும் அலசியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்பு அடைத்த கதவை திறந்து வீட்டில் உள்ளே தேடும் போது பாம்பு கண்ணில் தென்பட்டிருக்கிறது(அந்த இடத்தில நின்றுதான் எங்கள் அம்மா கதவை எல்லாம் அடைத்து இருக்கிறார். நல்ல வேலை பாம்பு ஒன்றும் செய்யவில்லை. உண்மையிலேய அது நல்ல பாம்புதான் போல).



பின்பு நண்பர் ஒருவர் அதை விரட்டுவதற்காக, ஒரு குச்சியை எடுத்து விரட்டும் போது பாம்பு படம் எடுத்து மிரட்டி இருக்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது போல் அனைவரும் விலக, பின்பு அவர் சின்ன குச்சி சரி படாது என்று நினைத்து பெரிய இரும்பு எதுவும் கிடைக்குமா என்று வெளியில் சென்று விட்டார்.இதற்கிடையில் இதை கேள்வி பட்டு கூட்டமும் கூடி விட்டது. பின்பு அங்கு இருந்த ஒரு முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய மகனும் சேர்ந்து பாம்பை அடித்து கொன்று விட்டார்கள். ஒரு வழியாக பாம்பின் சகாப்தம் முடிந்தது.



பின்பு நடந்ததுதான் காமெடியே.



அங்கு கூடி இருந்த சில இந்து மத பெண்கள், நல்ல பாம்பை ஏன் அடித்தீர்கள் ? அதை அடிக்க கூடாது , விரட்டதான் வேண்டும். நல்ல பாம்பை அடித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் கூறி எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி , அதோடு மட்டும் அல்லாமல் அதை வீட்டில்தான் புதைக்க வேண்டும். பின்பு பால் ஊற்ற வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். நல்ல வேலை பாலை ஊத்த வில்லை. புதைத்து மட்டும் இருக்கிறார்கள்(நல்ல வேலை பாலை ஊற்றாமல் என் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இல்லை என்றால் பாலா போகியிருக்கும் நிலைமை.இல்லை என்றால் நாங்களும் மூடநம்பிகையை பால் ஊற்றி வளர்த்தது போல ஆகி இருக்கும்.)



இங்கு எனக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது இவைதான்.
*) இன்னும் இந்த காலத்தில் இந்த மாதிரியான மூடநம்பிக்கை தேவைதானா?
*) அது எப்படி நல்ல பாம்பை அடித்தால் மட்டும் குடும்பத்திற்கு ஆகாமல் போகும். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல பாம்புகளை அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறதா ?
*) நடைமுறை வாழ்கையில் நாய் , பன்னிகளை எல்லாம் அடித்து கொண்டுதான் இருக்கிறோம் . நாய் , பன்னி அல்லது வேறு சில விலங்குகளை அடித்தால் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாதா? அது என்ன நல்ல பாம்புக்கு மட்டும் தனி விசேசம்?(உங்களுக்கு ஏதாவது இதில் விசயம் தெரிந்தால் சொல்லவும்)
*) நல்ல பாம்பின் தோல்கள் அதிக விலைக்கு போகும். இதை வைத்து பெல்ட், ஹண்ட்பாக் போன்றவை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதற்காக பல நல்ல பாம்புகள் வேட்டையாட பட்டுதான் வருகின்றன. இப்படி வேட்டை ஆடுபவர்களின் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கின்றனவா?



இதை விட ஒரு பெரிய கொடுமை, இதை பற்றி நான் என்னுடைய அலுவலக நண்பர்களிடம் விவரித்து கொண்டிருக்கும் பொழுதே , " அட என்னங்க நல்ல பாம்ப போய் அடித்து விட்டிர்களே , என்ன போங்க" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.இதை விட ஒருவர் மேலே போய் , கடந்த 10 வருடங்களாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . அதற்கு காரணம் 10 வருடங்களுக்கு முன்பு நான் அடித்த ஒரு நல்ல பாம்பே காரணம் என்று பெருமிதமாக கூறினார். இது எங்களுடைய நம்பிகை என்றும் கூறி கொண்டார். என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.



அறியாமை ஒழிந்திட , மூட நம்பிக்கைகளை அகற்ற படிப்பு அறிவு தேவை என்று கூறிக்கொண்டு அனைவர்க்கும் கல்வி அவசியம் என்று வாய் கிழிய கூறுகிறோம். ஆனால் அப்படியும் அது அழியாது என்றே நினைக்கிறன். ஏதாவது உதாரணம் கூற வேண்டும் என்றால் " இந்த கணினி காலத்தில் போய் இப்படி எல்லாம் கூறுகிறிர்களே" என்று சொல்லும் வழக்கு நம்மிடம் உண்டு. ஆனால் அந்த கணினி துறையில் உள்ளவர்களே இதை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் பொழுது .................ஒன்றும் சொல்வற்கு இல்லை.



நல்ல பாம்பை பற்றி சில விசயங்களை பார்போம்.


*) உலகத்தில் உள்ள அதிக விசத்தை கக்கும் பாம்புகளில் இதுவும் ஒன்று.


*) இது ஒரு கடியில் 6-7 மில்லி விசத்தை கக்கும் தன்மை உடையது. இந்த விஷம் ஒரு யானையவே அழிக்கும்.


*) இது அதிக பட்சம் 12 அடி வளரும். இப்போதைய அதிகபட்ச சாதனை 5.58 meter


*) கோபத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய உடம்பின் மூன்றில் ஒரு பகுதியை நிமிர்த்தி படம் எடுக்கும்.


*) இனபெருக்க சமயத்தில் , பெண் நாகம் , ஆண் நாகத்தின் வாயில் ஒரு முத்தம் கொடுக்க முயற்சி செய்யுமாம். அவ்வாறு அது வெற்றிகரமாக நடந்தால், பெண் நாகம் பல முட்டைகளை இடுமாம். தோல்வியானால் ஒரு முட்டையும் இடாதாம்.



இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் பாம்பு வீட்டிற்குள் வந்தால் , அதை அடிக்காமல் கொஞ்சவா முடியும் ?.



ஒன்று மட்டும் புரிகிறது ,,, 1000 பெரியார் வந்தாலும் நாட்டை திருத்த முடியாது.




ப.பிரதீப்

Tuesday, April 14, 2009

"விரோதி" தமிழ் வருட பிறப்பும், அம்பேத்கர் பிறந்த நாளும்

இன்று அம்பேத்கர் பிறந்த நாள் என்ற பொழுதும் , காலையிலிருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன காரணமோ தெரிய வில்லை யாரும் அம்பேத்கர் பிறந்த நாளை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை.

காலையில் நண்பர் ஒருவரிடம் இருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தது. நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினேன். அதற்கு அவர் "இல்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கு. நமக்கு இல்லை " என்று கூறினர். திரும்ப பதில் அளிக்க மனம் இல்லாத நிலையில் நிறுத்தி விட்டேன் பதில் அளிப்பதை.

இந்த மாற்றத்தை மக்கள் ஏற்று கொள்ளாததற்கு காரணம் அவர் தலித் என்பதாக கூட இருக்கலாம். இதே இன்று ஒரு வேறு ஒரு ஜாதி தலைவர் பிறந்த நாள் என்றால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கிறன்.எது எப்படியோ, இன்று வாழ்த்துக்குள் கூறி கொண்டாலும் , இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் கழித்து கண்டிப்பாக இது அம்பேத்கர் பிறந்த நாளாக மட்டும் கொண்டாட படும் என்பது மாற்ற மடியாது உண்மை. மாறும்.

இதில் பெரிய கொடுமை , அவருடைய இனத்தை சார்ந்தவர்களே இந்த மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பதுதான். " வேறு என்ன சொல்ல 'அறியாமை' ". இந்த அறியாமை இருப்பதால்தான் தலித் இனம் இன்னும் அப்படியே இருந்து கொண்டு இருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் இதை பற்றி விவாதித்த பொழுது , அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். வட மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று மற்ற பண்டிகையை போல் நன்றாக கொண்டாட படுகிறதாம். பிறந்த நாளுக்கு முந்தைய நாள் அன்றே அவர்கள் அம்பேத்கர் சிலை எங்கு இருக்கிறதோ அங்கு சென்று மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கலாம். இன்று அவர்கள் உடுத்தும் உடை வெள்ளை. பின்பு அவர்கள் மேடை கூட்டமிட்டு அவருடைய புகழை எடுத்து உரைபார்கலாம்.

இந்த மாற்றத்தை அங்குள்ள இந்து பழம்பெருமைவாதிகள் ஏற்று கொள்ள முடியாமல் திட்டமிட்டு சில காரியத்தை செய்ததாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன.
அம்பேத்கர் பிறந்தநாள் - ஏப்ரல் 14.
இறந்த நாள் -- டிசெம்பெர் 6.

இந்த நாளை மறக்க அடிக்க வேண்டும் என்பதற்காகவே, பாபர் மசூதியை இடிக்க அவர்கள் எடுத்து கொண்ட நாள் டிசம்பர் 6. இப்படியும் ஒரு கருது நிலவுகிறது.

தமிழ் வருட பிறப்பை, தை ஒன்றுக்கு மாற்றிய பிறகுதான் இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாள் என்றே பல பேருக்கு தெரிய வருகிறது. இந்த நோக்கில்தான் கருணாநிதி அவர்கள் தமிழ் வருட பிறப்பை மாற்றினார் என்றே தோன்றுகிறது. இந்த நோக்கில்தான் அவர் மாற்றினார் என்றால் இது வரவேற்கத்தக்கது. தமிழ் வருட பிறப்பை தை ஒன்றுக்கு மாற்றினால் இங்கு உள்ளவர்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

இப்படி இருக்க , ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறகும் பொழுது ஒரு பெயரை வைத்து அழைக்கும் பழக்கம் இங்கு உண்டு. அது போல இந்த வருடம் "இந்தபுத்தாண்டுக்கு பெயர் "விரோதி". சரியாகத்தான் அமைந்திருக்கிறது என்று நினைகிறேன் இந்த புத்தாண்டை மாற்றியது பல பேருக்கு விரோதத்தைதான் ஏற்படுத்துகிறது.

"விரோதி" என்பதை போல மொத்தம் 60 பெயர்கள் உண்டாம். 60 வருடம் முடிந்த பிறகு திரும்பவும் இதே பெயர் தொடரும். இதை வைத்துதான் 60வது கல்யாணத்தை நடத்தும் வழக்கம் இங்கு இருக்கிறது.

Sunday, April 5, 2009

தடுமாறும் தாம்பத்யம்

சில நாட்களுக்கு முன்பு , நண்பர் ஒருவரிடம் உரையாடி கொண்டிருந்த பொழுது அவருடைய தங்கையை பற்றி வருத்தத்துடன் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய தங்கைக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் , பின்பு சில நாட்களிலேயே மனவருத்தம் ஏற்பட்டு இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டதாகவும், காரணம் சரியாக தெரிய வில்லை என்றும் கூறினார்.

இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே , இன்னொரு நண்பரும் என்னுடைய தங்கைக்கும் இதுமாதிரிதான் , அவரும் இப்பொழுது எங்கள் வீட்டில்தான் உள்ளார் என்று கூறினார்.

பின்பு தீர விசாரித்த பொழுது , இவருக்கும் உள்ள பிரச்சினை பொதுத்தான் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் தாம்பத்யம் நடக்கவில்லை என்பதுதான் அது.

பொதுவாகவே இது மாதிரியான விஷயங்கள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிலருக்கு தாம்பத்யம் நடக்கவில்லை என்றும், இன்னும் சிலருக்கு ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விஷயம் சற்று விஸ்வரூபம் எடுத்து விவாகரத்து வரையிலும் சென்று உள்ளன. மனோதத்துவ நிபுணர்களுக்கு வரும் பெரும்பாலான சந்திப்புகள் இதனுடன் சம்பந்த பட்டே வருகின்றன. பின்பு அவர்கள் கூறும் சிகிச்சைக்கு உட்பட்டு குணமாகி பின்பு குழந்தை பேறு உண்டாகி சந்தோசமாக வாழ்கை சென்றதாக கூறும் சம்பவங்களும் இங்கு உண்டு.
மேலே கூறிய விசயங்களை பார்க்கும் பொழுது , என்னிடம் சில கேள்விகள் எழுகின்றன.

திருமணத்திற்கு முன்பு அனைத்து விசயங்களையும் பார்த்து, விசாரித்து தன் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யும் பெற்றோர்கள் இந்த விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. இன்னும் சற்று தீர சிந்திதோமானால் இது மாதிரியான விசயங்களை தனக்கு வரபோகும் மனபெண்ணிடமோ அல்லது ஆணிடமோ நேரடியாக கேட்க முடியாது என்பதுதான் உண்மை.

இதை தவிர்க்க சில முறைகளை நாம் மேற்கொள்ளலாம்.

*) ஆணோ அல்லது பெண்ணோ , தனக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் திருமணம் நடக்க போகிறது என்றால் , தானாகவே முன்வந்து "திருமணத்திற்கு நாம் மன மற்றும் உடல் அளவில் தகுதியாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முறையான மருத்துவரிடம் சென்று முழு உடல் சோதனை எடுத்து கொள்ளலாம்". இதில் ஏதாவது குறை இருக்கிறது என்று தெரிந்து கொண்டால், திருமணத்திற்கு பிறகு எடுக்க போகும் சோதனையை இப்போதே எடுத்து கொண்டதுக்கு சமமாகி விடும். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சில மனகசப்பை தவிர்கவும் இது ஒரு வாய்பாக அமையும்.

அல்லது

*) ஆண் மற்றும் பெண் இரு வீட்டிலும் , தனக்கு வரபோகும் ஆணோ அல்லது பெண்ணோ முறையான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று முழு தைரியத்துடன் கேட்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் ரத்த பரிசோதனை சான்றிதலையாவது கேட்கலாம். இது ஓரளவு எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகளிலிருந்து தன் குடும்பத்தை காக்க ஓரளவு வழியாக அமையும் .

தாம்பத்யம் என்பது இல்லறத்தில் ஒரு பகுதிதான் என்றாலும் , அதுவே ஒரு குடும்பத்தை பிரிக்கும் அளவுக்கு ஒரு பெரிய சக்தியாக வளர்த்து நிற்கும் பொழுது மேலே கேட்க தூண்டும் கேள்விகள் தப்பு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

சமீபத்தில் செய்தித்தாளில் வந்த ஒரு நிகழ்வு படிக்கச் சற்று சந்தோசமாக இருந்தது. ஒரு திருமண மண்டபத்தில் எந்த ஒரு திருமணம் நடந்தாலும் , திருமணத்திற்கு முன்பு ஆண் மற்றும் பெண்ணிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்களாம். அவ்வாறு ஒரு திருமணத்தின் பொது மன ஆணுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்க பட்டு பின்பு திருமணத்தை நிறுத்தினார்களாம். இல்லைஎன்றால் அந்த பெண்ணின் வாழ்கை கேள்விக்குறியே?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்