
சமீபத்தில் ரத்த பரிசோதனை செய்த பொழுது ஏற்பட்ட அனுபவம் எனக்கு மற்றும் என்னுடைய நண்பருக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து என்றே கூற வேண்டும்.
மூன்று மாதத்திற்குள் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று நினைத்து சென்னையில் உள்ள பெரிய மருத்துவ நிலையத்திற்கு சென்று பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து அதனுடைய விவரத்தை பார்த்த பொழுது சற்று அதிர்ச்சியாக மற்றும் சந்தேகமாக இருந்தது. என்னுடைய ரத்த பிரிவு A2B +ve (முன்பே தெரியும்). அங்கு அவர்கள் கொடுத்தது AB+ve.
சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்க்காக பரிசோதனை செய்த மருத்துவரிடம் சென்று விசாரித்த பொழுது அவர் நாங்கள் இப்படிதான் செய்வோம். 1 அல்லது 2 போன்ற உட்பிரிவுகள் எல்லாம் குறிப்பிடுவதில்லை என்று கூறினார். எண்ணை குறிபிடுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்டதிற்கு சரியான பதில் ஒன்றும் அவரிடம் இருந்து வராத காரணத்தினால் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு சிறு பரிசோதனை கூடத்திற்கு சென்று ரத்தத்தை கொடுத்தேன். அவர் பார்த்த மாத்திரத்தில் இது B+ve என்று கூறி விட்டார். அதிர்ச்சியோ அதிர்ச்சி (எனக்கும் , என் நண்பருக்கும்).
"சார், நல்ல பார்த்து சொல்லுங்க......ஒன்னும் அவசரம் இல்ல....இப்பதான் இன்னொரு இடத்துல இன்னொரு பிரிவ சொன்னாங்க....நீங்க ஒன்னு சொல்றீங்க.... நல்ல டைம் எடுத்துகோங்க.... அப்புறம் சொல்லுங்க " என்று கூறிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து சென்று பார்த்த பொழுது அவர் விடாபிடியாக உங்களுக்கு இதுதான் B+ve என்று கூறி விட்டார். சந்தேகம் இருந்தால் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி பரிசோதனை செய்த ரத்தம் பதிந்த அந்த கண்ணாடியை என்னிடம் காண்பித்தார்,
" இப்படி பார்க்க தெரிஞ்சா நான் என் உங்கிட்ட வரேன் என்று சொல்லி விட்டு " அங்கிருந்து கிளம்பி விட்டோம். (திரைப்பட சென்சார் பிரிவில் இருந்தாரோ என்னமோ தெரியவில்லை A வை கொடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருந்து விட்டார். இதில் எது நடந்தாலும் ஏற்று கொள்ளுங்கள் என்று உணர்த்த விரும்பினாரோ தெரியவில்லை , B+ve என்று கூறி சென்று விட்டார்.)
" என்னதாண்டா நம்முடைய உண்மையான ரத்த பிரிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அன்றே பெரிய நிறுவனம் வைத்துள்ள ஒரு ஆய்வு கூடம் மற்றும் இன்னொரு நிறுவனத்தில் சென்று ஆய்வு செய்த பொழுதுதான் என்னுடைய உண்மையான ரத்த பிரிவையே அறிந்து கொள்ள முடிந்தது. (A2B+ve)".
இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்றால் , என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்திற்காக ரத்த கொடுக்க சென்று இருக்கிறார். அவருக்கு பரிசோதனை செய்து விட்டு உங்களுக்கு மஞ்சள்காமாலை உள்ளது என்று சொல்லி விட்டனர். அவருக்கு அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இன்னொரு பெரிய நிறுவனத்தில் சென்று பார்த்த பொழுது ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லி விட்டனராம். அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் மேலும் ஒரு நிறுவனத்தில் சென்று ரத்தத்தை கொடுத்து விட்டு முடிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.
மருத்துவத்தில் மிக மிக சாதரணமாக கண்டுபிடிக்க கூடிய ரத்த பிரிவை தெரிந்து கொள்ள இவ்வளவு அவஸ்தை பட வேண்டுமா என்ன? இது பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்த பொழுது மேலோட்டமான பரிசோதனையில் ரத்த பிரிவை அறிந்து கொள்ள முடியும். இன்னும் சில பரிசோதனைகள் செய்யும் பொழுது உட்பிரிவு இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். பல ஆய்வு கூடங்களில் இது போன்ற உட்பிரிவுகள் செய்வதில்லை என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறினார்.
பணத்திற்காக சில பேர், உங்களுக்கு ரத்தத்தில் அந்த பிரச்சினை உள்ளது, இந்த பிரச்சினை உள்ளது என்று கூறியும் பணத்தை பிடுங்குவதாகவும் கூறினார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த சமூகம் திருந்த போவதும் இல்லை.
மனிதனுக்கு மிக முக்கியமான ரத்த பிரிவை தெரிந்து கொள்வதில் இவ்வளவு பிரச்சினை என்றால் என்ன சொல்வதென்று தெரியவில்ல தமிழ்நாடு நிலைமையை...?
ப.பிரதீப்