Sunday, January 24, 2010

ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்



இன்றைய கால கட்டதில் நிறைய பேர் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கூறி கொண்டு "பிராடு மைன்ட்" ஆகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.இது ஒரு வகை. இன்னும் சில பேர் இருப்பார்கள். அதாவது ஒரு தவறை ( என்று உலகம் சொல்வதை) யாருக்கும் தெரியாமல் செய்தால் அது தவறு இல்லை. ஆனால் பலருக்கு முன்பு செய்து விட்டால் அது தவறு என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள். பொதுவாக இம்மாதிரியாக இருபவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் உண்மையில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக அல்லது பெருமைக்காக நாங்கள் எல்லாம் "ப்ராட் மைன்ட்" என்று திரிபவர்கள். உதாரணத்திற்கு.......






- Pub மற்றும் பார் (bar ) போன்ற இடங்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். அம்மாதிரியான இடத்திற்கு செல்பவர்களை பொதுவாக இவ்வுலகம் சரியான மதிப்போடு பார்ப்பது இல்லை. காரணம் கேட்டால், pubku சென்று தண்ணி அடிகிறார்கள் என்றும் , பெண்களோடு அப்படி, இப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லி இவர்கள் இங்கு certificate கொடுப்பார்கள். இவர்கள் சொல்வது சரியா அல்லது தவறா என்பது என் கேள்வி அல்ல? இதை சொல்லும் ஆட்கள் சரியானவர்களா என்பது தான் என் கேள்வி? இவர்கள் இப்படி வாய் கிழிய தம்பட்டம் அடித்து விட்டு , வீட்டில் சென்று யாருக்கும் தெரியாமல் கதவை சாதி கொண்டு மேட்டர் படம் பார்த்து கொண்டு இருப்பார்கள் அல்லது இதே செயலை வேறு எங்கேயாவது செய்து கொண்டு இருப்பார்கள். எனக்கு தெரிந்து இம்மாதிரியான அனைத்து வக்கிர குணங்களையும் மனதில் வைத்து கொண்டு திரிவதை விட , pub அல்லது வேறு இடத்திற்கு சென்று தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மேல். எனக்கு தெரிந்து இது தவறும் இல்லை , இந்த இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.





- இன்னும் சில பேர் இருப்பார்கள். அழகான பெண்களை பார்ப்பது பிடிக்கும் , சைட் அடிப்பது பிடிக்கும் என்று சொல்லி கொண்டு கண்ணாலேயே கற்பழித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள். இதை சொல்லிவிட்டு தங்களை "ப்ராட் மைன்ட்" என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் சில கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை.
*) இவரும், இவரது மனைவியும் எங்கேயாவது செல்லும் போது, இவரோட மனைவியை யாரவது இது மாதிரி வலுவாக சைட் அடித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று சொன்னால் ஒத்து கொள்வார்களா. அல்லது இதே நிலை இவருடைய தங்கையை பார்த்து யாரவது சொன்னால் ஏற்று கொள்வார்களா.

ஏன் இந்த விளம்பரம் ? பார்த்தால் பார்த்தேன் என்று ஒத்து கொள்ள வேண்டியதுதானே.....எனக்கு தெரிந்து ஒரு திரைப்பட பாட்டில் வருவது போல, "ஆண்களில் ராமன் கிடையாது" என்பது உண்மைதான். ( ஆனால் உண்மையில் ராமன் அப்படிதானா என்று சீதையைத்தான் கேட்க வேண்டும் )

- போன வாரத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அவர் மின்னஞ்சலில் அனைவர்க்கும் அழைப்பிதழை அனுப்பினார். அந்த அழைப்பிதழுக்கு பெயராக (1 .jpg ) என்று அனுப்பி இருந்தார். இதில் ஒரு தவறும் இல்லை. சில பேர் இதிலும் ஒரு குறை கூறி கொண்டு " அது எப்படி 1 .jpg என்று வைக்கலாம் . invitation .jpg " என்றுதான் வைத்து இருக்க வேண்டும் என்று அதிலும் குறை கூறி கொண்டு இருந்தார்கள். எனக்கு இதை கேட்டவுடன் ஜீரணிக்கவே முடிய வில்லை. இதில் எல்லாம் குறை கண்டு பிடிக்க முடியுமா? ஆனால் இவர்கள் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கொண்டு இருப்பார்கள். என்ன சொல்வது என்றே எனக்கு தெரிய வில்லை.

உண்மையில் .......... ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்

Monday, January 11, 2010

sex and resolution

இந்த வருஷம் பிறந்ததிலிருந்தே பார்த்த நூறு பேரில் 40 பேர் கேட்கும் கேள்வி ...இந்த வருஷம் என்ன resolution எடுத்து இருக்கீங்க அப்படிங்கிறதுதான்?
உண்மையை சொல்ல போனால் இந்த வருஷம் மட்டும் அல்ல எல்லா வருசமும் பிறக்கும் போது கேட்கபடுகின்ற சில கேள்விகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்........ அதே போன்று எல்லா வருடமும் போல இந்த வருசமும் அதே பதிலைத்தான் சொல்ல போகிறோம்.

- தம் அடிகிரத குறைக்கணும்
- தண்ணி அடிகிரத குறைக்கணும்
- தொப்பைய குறைக்கணும்

இது மாதிரி பல. என்னைய கேட்டா இது மாதிரி சொல்றவங்க வாயதான் குறைக்கணும் முதல்ல. ஏன் என்றால் , இது மாதிரி சொல்றவங்க சொல்லிகிட்டுதான் இருப்பாங்களே தவிர செய்வதாக தெரியவில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால் , மேலே சொன்ன விசயங்களை கொஞ்சம் முயன்றால் செய்து விடலாம். ஆனால் முடியாத சில காரியங்கள், நம் உள்மனதில் ஆணி வைத்து அடித்ததை போன்ற சில விஷயங்கள் மனதை விட்டு அகறாமல் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அது மாதிரியான விஷயங்கள் நமக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. அது போன்ற சில விசயங்களை நாம் புது வருடம் அதுவுமாக அகற்ற நினைத்தால் நலம் என்று தோன்றுகிறது. அது போன்ற விசயங்களில் சில ..................................

1 ) தற்போது நடந்த திருநெல்வேலி சம்பவத்தை எடுத்து கொள்வோம். அனைவரும் அந்த அரசியல்வாதிகளையே குறை கூறினாலும், மக்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் செய்து இருக்கலாமே. அவர்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அடுத்தவர்களுக்கு நாம் மற்ற காரியத்தில் உதவி செய்யாமல் இருந்தாலும் , உயிர் போகும் தருவாயிலாவது உதவி செய்து இருக்கலாம். இது மாதிரி காரியங்களில் நாம் உதவி செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கமும் ஒரு காரணமாகவே அமைகிறது. அப்படி யாரவது உதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தால் அவரை அலையவிட்டு , கேள்வி கணைகளை அவரிடம் தொடுத்து , அடுத்த தடவை அவர் நினைத்தாலும் அவரை செய்யவிடாமல் தடுப்பது , இந்த அரசாங்கமும் , காவல்துறையுமே. இனி வரும் காலங்களில் அரசாங்கம் , இது மாதிரி அவசர காலங்களில் உதவுபவர்களை , எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம் என்று கூறினால் , இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க வழி என்று தோன்றுகிறது.

2 ) அலுவலங்களில் நடக்கும் அரசியல். அரசியல் இல்லாத இடமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலங்களும் அதற்கு விதி விலக்கல்ல. சில பேர் இன்னும் , தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அடுத்தவர் வேலைக்கு ஆப்பு வைப்பது போன்ற சில கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இவர்கள் இப்படி செய்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

3 ) எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும், உலகமே தொழில்நுட்பத்தில் வளர்ந்தாலும் , இன்னமும் கேவலமான விஷயங்கள் நமக்கு தெரிந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்யாணத்தின் போது வாய்கூசாமல் கேட்கப்படும் வரதட்சணை பற்றிதான் சொல்கிறேன். சில பேர் சொல்வது உண்டு, இப்போது உள்ள generation மாறி விட்டது.மாப்பிள்ளை கேட்பது இல்லை, அவர்களுடைய தாய் , தந்தை தான் கேட்கிறார்கள் என்று. தெரியாமல் தான் கேட்கிறேன் ? இதுமாதிரி சொல்கிறவர்கள் அனைவரும் , தன்னுடைய தாய் தந்தையை கேட்டுதான் அனைத்து காரியத்தையும் செய்கிறார்களா ? கேட்காமல் தடுக்கவேண்டும் என்றால் தாரளமாக தடுக்கலாம். இது மாதிரி கேவலமான மக்களை வைத்து கொண்டு இன்னும் இந்தியா வல்லரசு ஆக போகிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் ... காமெடியாகத்தான் இருக்கிறது.

தினமலர் நாளிதழில் அந்துமணி பக்கதில் ஒரு பெண் , அவருக்கு வரதட்சணை சம்பந்தமாக எழுதிய ஒரு கடிதத்தில் கிழித்து உள்ளார். கட்டாயமாக படிக்கவும்.

http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=1135

4 ) நமக்கு தெரிந்து , நம்முடைய சொந்தங்கள் அல்லது நம்முடைய நண்பர்கள் கஷ்ட படும்பொழுது , அவர்களுக்கு பணம் தேவை என்று தெரிந்தும், "கொடுத்தால் வராது" என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்காமல் இருக்கும் நல்ல உள்ளங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் "கோவில்" என்று யாரவது கேட்டால், அதற்காக முழு பணத்தையும் தருவார்கள் . எடுத்துக்காட்டாக, திருப்பதி கோவிலிக்கு சென்று ஆயிர, லட்ச, கோடி ரூபாய்களை உண்டியலில் செலுத்தும் உள்ளங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. கேட்டால் சாமி குத்தம் ஆகி விடுமாம். சில பேர் நன்கொடை என்று கோவிலுக்கு கொடுப்பார்கள், காரணம் விளம்பரம் ஒன்று மட்டுமே. இன்னமும் சில கோவில்களில் , "உபயம்" என்று Fan , ஸ்பீக்கர் என்று பல இடங்களில் இவர்களுடைய பெயர்கள் பொரித்து இருப்பதாய் பார்க்கலாம்.

இது மாதிரியான கேவலமான புத்தி உடைய அல்பமானவர்கள் , நம்மில் பலர் இருந்து கொண்டுதான் இருக்கின்றோம். முடிந்த அளவுக்கு இது போன்ற விசயங்களை புது வருடம் அதுவுமாக மாற்ற முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.

புரிகிறது .....செக்ஸ் என்று சொல்லிவிட்டு அந்த விஷயத்தை இன்னும் எடுக்காமல் இருக்கிறேனா......கீழே உள்ள லிங்கை படிக்கவும். நம்மில் உள்ள நாமை பிரித்து மேய்ந்து இருக்கிறார் ஒருவர். புதிய பதிவர்தான். படித்து தங்களுடைய பொன்னான கருத்துகளை முடிந்த அளவுக்கு இடவும்....


http://piesasu.blogspot.com/

Saturday, December 5, 2009

அப்படி இருந்தால் அவர் கடவுளா?

சிறு வயதிலிருந்தே கிறிஸ்தவனாக வளர்ந்தவன் நான். ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் என் அப்பா இந்து , அம்மா கிறிஸ்டின். அம்மாவுக்கு பற்று கிறிஸ்தவ மதத்தில் அதிகம் என்பதால் நானும் இந்த மததிலேய வளர்த்தேன் , தாயை போல பிள்ளை என்பது போல. ஆனால் சமீப காலமாக இந்த மதத்திலும் சரி, இல்லை எந்த மதத்திலும் சரி , மனது சரியாக ஒத்து போவது இல்லை. நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் , புது நன்மை என்ற சடங்கை பற்றி தெரிந்து இருக்கும்.மற்ற மதத்தவருக்கும் இதை பற்றிய தெளிவு இருக்கும் என்று நினைக்கிறன். ஒரு சின்ன அப்பத்தை பிட்டு நாக்கில் வைப்பார்கள், இதைதான் புது நன்மை என்று குறிபிடுவார்கள். நான் புது நன்மை வாங்கிய பிறகு, சில நேரம் வாங்குவேன் , சில சமயம் வாங்க மாட்டேன். ஆனால் நான் வாங்காத நாட்களில் என் அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொள்வேன். அதனால் பிடிக்கிறதோ இல்லையோ , இதை வாங்கி விடுவதை ஒரு கடமையாக செய்து விடுவேன்.

இங்குதான் சங்கடமே ஆரம்பிக்கிறது , அந்த அப்பத்தை கொடுக்கும் முன்பு கோவிலில் , கிறிஸ்தவர்கள் மட்டுமே இதை வாங்க வேண்டும் என்று குறிபிடுவார்கள்.
- ஏன் இதை கிறிஸ்தவர்கள் மட்டும் வாங்க வேண்டும்?
- மற்ற மதத்தினர் வாங்கினால் என்ன தவறு ? அல்லது கொடுபதினால் என்ன தவறு?
- இயேசு கோபித்து கொள்வாரா? அல்லது இயேசு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தானா? அப்படி இருந்தால் அவர் கடவுளா?

இதை கொடுக்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம். ஆனால் கொடுபதினால் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து. அந்த காலத்தில் இயேசு, சில மீன் துண்டுகளை வைத்து ஊருக்கே பகிர்ந்து கொடுத்தார் என்று விவிலியத்தில் சொல்வது உண்டு. அப்படி இருக்க, இந்த சிறு அப்பத்தை கூட மற்றவர்களுக்கு பகிர்த்து கொடுக்காத இந்த மத கோட்பாடுகள் ஏற்று கொள்ள படாத ஒன்றாகவே எனக்கு படுகிறது.

பிரச்சினையே இங்குதான் இருக்கிறது. நாம் கடவுளை கடவுளாக பார்ப்பதே இல்லை. அவரையும் மனிதராகத்தான் நாம் பார்க்கிறோம். மனிதராக பார்பதினால்தான், இன்னமும் தேவை இல்லாமல் நம்மை வருத்தி, அவரிடம் நாம் , எனக்கு இதை செய், அதை செய் என்று கேட்டு கொண்டு இருக்கிறோம். மனிதரிடம்தான் இந்த பண்பு உண்டு. உனக்கு நான் அதை செய்தேனே, எனக்கு நீ இதை கூட செய்ய மாட்டாயா? என்றெல்லாம் நாம் கேட்பது உண்டு.

இன்னமும் வேளாங்கண்ணி கோவிலில் சென்று பார்த்தீர்களேயானால் , முட்டி போட்டு ஒரு இடத்திலிருந்து கோவிலை சென்று அடையும் வரை, மணலில் தன்னை வருத்தி, வேண்டுதல் நிறைவேற்றி கொண்டு இருப்பார்கள் அல்லது தனக்கு ஏதாவது கேட்டு கொண்டு இருப்பார்கள். கோவிலை சென்று அடையும் பொழுது அவர்கள் முட்டியில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும். இந்த வேதனையில் இருந்து வெளிவர அவர்களுக்கு எப்படியும் மாத கணக்கு ஆகும். இப்படி எல்லாம் வேண்டுதல் கடவுள் கேட்கிறாரா? அல்லது அப்படி வருத்தி ஏதாவது செய்தால்தான் கடவுள் நமக்கு செய்வாரா? அப்படி செய்தால் அவர் கடவுளா? . இதை பற்றி நண்பர் joe கூட ஒரு பதிவு எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கிறிஸ்தவ மதத்தில் மட்டும் இது மாதிரியான சம்பவங்கள் நடப்பது இல்லை..எல்லா மதத்திலும் இப்படி தேவை இல்லாத இந்த அநியாங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. என அண்ணனின் நண்பர் ஒருவர், அவருக்கு ஒரு தேவை நடக்க வேண்டும் என்று நினைத்து , ஒரு இந்து கோவிலுக்கு சென்று தன கையில் சூடத்தை ஏற்றி அது அனையும்வரை கையில் ஏந்தி நின்று கொண்டு இருந்தார். அவருக்கு அவர் வேண்டியது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய அன்றாட வேலைகள் ஒன்று கூட நடக்கவில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அவரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு "நம்பிக்கை" தான் என்று கூறினார். இதன் பெயர்தான் நம்பிக்கையா? எனக்கு புரியவில்லை!!!!!!.

நான் முன்பே கூறியது போல, எனக்கு எந்த மதத்திலும் இப்பொழுது நம்பிக்கை இல்லை. என் அப்பாவின் மதமான இந்து மதத்தில் முற்றிலுமாக எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் கீழ்வரும் இந்த மூன்று காரணங்கள் தான்.
1 ) மத சடங்குகள்.
2 ) கோட்பாடுகள்.
3 ) முக்கியமாக ஜாதி.

ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை என்பதே எனது கருத்து. தாயின் முன் , அவளுடைய அனைத்து குழந்தைகளுமே அவளுக்கு சமம்தான். அப்படி இருக்க, அது எப்படி ஒரு மதத்தில் இருந்தே ஒருவரை உயர்ந்தவராகவும் , மற்றவரை தாழ்ந்தவராகவும் பார்க்க முடியும். எனக்கு தெரிந்து கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அப்படி இருக்க வாயப்பு இல்லை. இடைசெருகல்கல்தான் அனைத்து மதத்திலும் அதிகமாக இருக்கின்றன. இது அனைவர்க்கும் தெரியும். ஆனால் யாரும் அதை ஏற்று கொள்வதும் இல்லை, அல்லது கண்டு கொள்வதும் இல்லை.

உதாரணத்திற்கு ஜாதி இல்லை என்பது அனைவர்க்கும் தெரியும், காரணம் , ஒருவர் பல நாள் நமக்கு கீழ் வேலை பார்த்து விட்டு , திடிரென்று நமக்கு நிகராக வருவதை, நம்மால் ஏற்று கொள்ள முடிவது இல்லை. அதேதான் ஜாதியிலும் நடக்கிறது. இவ்வளவு நாள் நம்மை விட தாழ்ந்த ஜாதி என்று இருந்தவன், திடிரென்று நமக்கு நிகர் என்று சொல்லி கொள்வதை யாரும் விரும்புவது இல்லை. அதனால்தான் ஒவ்வொரு ஜாதியினரும், இந்த ஜாதி நம்மை விட தாழ்ந்தது என்று சொல்லி கொண்டு ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் தாழ்த்த ஜாதியில் கூட இந்த இந்த பிரிவு இருக்கிறது. அந்த பிரிவில் உள்ளவர்கள், இவன் நம்மை விட தாழ்ந்தவன் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க ஜாதி எப்படி ஒழியும்? முடியாத செயல் என்றே தோன்றுகிறது. இந்த காலத்திலும் ஜாதியை வைத்து கொண்டு, கோவிலுக்கு மற்றும் பல இடங்களில் அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது ஏற்று கொள்ள முடியாததாகவே இருக்கிறது........அங்கீகாரம் கிடைக்காத எந்த இடத்திலும் நாம் எதிர்த்து போராட வேண்டும்.........

முன்பே சொன்னது போல, ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை. அதனால் தான் அம்பேத்கர் கூட, கடைசி நாட்களில் புத்த மதத்தை தழுவினார். ஆக, இடை செருகல்களை அகற்றுவோம். தேவை இல்லாததை வளர்த்து விடாமல் , மனிதத்தை வளர்ப்போம்.

Sunday, November 8, 2009

விடை தெரியாத கேள்விகள்




சில நேரங்களில் நாம் பேசுவது ஒன்றாக இருக்கும், அதையே நாம் செய்வது ஒன்றாக இருக்கும். அது மாதிரியான விசயங்களில் ஒரு சில.

ஆணாதிக்க மனோபாவம் உடையவர்களை பற்றி எடுத்துகொள்வோம்.
- அவர்களிடம் சென்று அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என்று கேட்டால் , அம்மாதான் பிடிக்கும் என்று சொல்வார்கள்.
- அவர்களுக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருந்தால் , தங்கை மீது அளவுக்கு மீறிய பாசத்தை வைத்து இருப்பார்கள்.
- பருவ காலத்தில் , ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தும் இருப்பார்கள் ( அந்த பெண் மதிக்காத போது கூட ).
- அவர்களுக்கு திருமணம் ஆகியது என்றால் , மனைவி சொல்வதை மட்டும் கேட்டு கொண்டி இருப்பார்கள் (மற்றவர்களை மதிக்காமல் ).
- அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது என்றால் , அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் அதன் மீது அளவுக்கடந்த பாசத்தை வைத்து இருப்பார்கள் , மகனை விட.
- அரசியலை எடுத்து கொண்டால், ஜெயலலிதா தான் அல்லது சோனியா காந்தி தான் என்று முழக்கம் இடுவார்கள்.

இவ்வளவும் செய்து கொண்டு, ஆண்தான் பெரியவன் ,பெண் அடிமையாகதான் இருக்க வேண்டும் என்று மார்தட்டி கொண்டு இருப்பார்கள். இது மாதிரியான ஆள்களை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் நடை முறை வாழ்கையில்.

இன்னும் சில பேர் இதற்கு அப்படியே எதிராக, பெண்ணடிமை கூடாது , ஆணாதிக்கம் தவறு என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கே திருமணம் நடக்கிறது என்று எடுத்து கொள்வோம். அவர்களை வீட்டோடு மாப்பிளை என்று கூறினால் , அவர்கள் திருமணம் செய்வார்களா என்று கேட்டால் ....."முடியாது" என்ற ஒரு சொல்தான் பதிலாக இருக்கும்.

அது என்ன......... திருமணத்தின் போது பெண் மட்டும்தான் , அவர்கள் சொந்த பந்தத்தை விட்டு வர வேண்டுமா? இதுவும் ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ , நமக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவம்தானே?

இதற்கு என்னை நானே கேள்வி கேட்டு கொண்டால் , எனக்கும் பதில் சொல்ல தெரியவில்லை???????.

இது மாதிரியான முன்னுக்குபின் முரணான பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.....பதில்தான் தெரியவில்லை.

எல்லா நிகழ்ச்சிகளிலும் , Ladies First என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று தான் நினைகிறேன். டாக்டர் ஷாலினி அவர்கள், அவருடைய புத்தகத்தில் கீழே உள்ளவாறு எழுதி இருப்பார். அதை படிக்கும் பொழுது அது உங்களுக்கு புரியும்

"கரு உருவாகும் போது , முதலில் அது பெண்ணாகத்தான் உருவாகுமாம்.. பின்பு க்ரோமோசோம்களின் மாற்றங்களினால் அது ஆணாக மாறும் அல்லது பெண்ணாகவே இருக்கும். ஆக முதலில் உருவாவது பெண் தான். ஆண் அல்ல. அதனால்தான் ஆணுக்கு உபயோகமே இல்லாமல் மார்பகங்கள் இருக்கிறதாம் ".

Monday, October 12, 2009

விபச்சாரன்கள்





விபச்சாரம் - இந்த வார்த்தைக்குரிய அர்த்தத்தை முதன்முதலில் உணர்ந்தது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பன் மப்பில் இருக்கும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணிடம் திட்டு வாங்கும் போதுதான் . இது நடந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில். மற்றொன்று, நடுத்தர வயது உள்ள ஒரு பெண், ஒரு நடுதரதிற்கும் (தரம் இல்லாத) அதிகமான வயது உள்ள ஒரு ஆணிடம் எதோ பேசி , அவரும் பித்து பிடித்தவர் போல அவள் பின் சென்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்து நானும் என் நண்பனும் ஆர்வ மிகுதியில் அவர்களை பின்தொடர்ந்து , பின்பு அந்த காட்சி ஒரு ஹோடெலின் அறை கதவை சாதியதோடு நின்றது. புத்தர் போதி மரத்தில் ஞானம் பெற்றது போல, எங்களுக்கு ஒரு ஹோடேலில் விபசாரம் பற்றிய ஞானம் பிறந்தது.

பொதுவாக விபசாரம் என்ற வார்த்தை எப்போதும் பெண்களை சுற்றியேதான் வந்து கொண்டிருகிறதே தவிர ஆண்களை பற்றி எப்போதும் ஒரு வார்த்தை கூட வந்ததிலை, கேள்வி பட்டது கூட இல்லை. இவர்களிடம் செல்லும் ஆண்களுக்கு என்னதான் பெயர்? இதுவும் ஒரு வகையில் ஆணாதிகத்தின் ஒரு பகுதிதான்.

உதாரணத்திற்கு ,

*) ஒன்றுக்கும் அதிகமான பெண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் பெண்ணை திருமணம் செய்யும் ஆணை , நாம் பலவாறு கேலி செய்வதுண்டு( பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தே) . " ரெண்டு மச்சினிசியா......ம்ம்ம்ம்ம்...மஜாதான்" .ஆனால் இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் ஆணுக்குதான். இதுவே இதற்கு அப்படியே உல்டாவாக ஒரு பெண்ணை கற்பனை செய்து பாருங்கள். ஒன்றுக்கும் அதிகமான ஆண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை " ரெண்டு மச்சினனா ....ம்ம்ம்ம்ம்ம்....மஜாதான் " என்று என்றைகாவது சொல்லி இருக்கிறோமா. சொல்லத்தான் முடியுமா.. நீ அவர்களுக்கு தாய் போல என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். அப்படியே சொன்னால் அவள் " விபச்சாரி, நடத்தை கெட்டவள், கள்ள காதல்" என்று பல பெயர்கள். இந்த விசயத்தில் ஆண்களுக்கு பெயர் மன்மதன் , பெண்கள் செய்தால் வேறு பெயர்.

*) குடும்ப தலைவன் , சில வீட்டில் அனைவருக்கும் தெரிந்தே "சின்ன வீடு" வைத்து கொள்ளலாம் . அவனுக்கு எந்த பெயரும் இல்லை.தட்டி கேட்டாலும் ஒன்றும் ஆக போவதும் இல்லை. அவன் ஆண் . குடும்ப தலைவன். ஆனால் இதையே பெண் செய்தால் மேலே சொன்ன அனைத்து பெயர்களும் அவளுக்கு வரும்.

*) பலான படங்களுக்கு சென்றவர்களுக்கு தெரியும், படத்திற்கு வருபவர்களில் , இளசுகள் அதிகமா அல்லது பெரிசுகள் அதிகமா என்று. ஆண்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு அவர்களுடைய இச்சையை தீர்த்து கொள்ள குறிபிட்ட வயதை தாண்டிய பிறகும். ஆனால் பெண்களுக்கு? (அவர்களும் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆசா பாசங்கள் எல்லாம் ஆண்களுகுதானா? பெண்களுக்கு இல்லையா? இந்த கேள்விக்கு பதில் என்னவென்றும் தெரியவில்லை ).

*) கடவுளை கூட நாம் விட்டு வைக்க வில்லை இந்த விசயத்தில். கோகுலத்தில் உள்ள கிருஷ்ணன் ,பல பெண்களிடம் விளையாடுவாராம், குளிக்கும் போது துணிகளை எடுத்து விடுவாராம்.அவருக்கு பெயர் மன்மதன். ஆனால் இது மாதிரி குணாதிசயங்கள் நிறைந்த பெண் கடவுளை பற்றி நான் அறிந்ததில்லை. கடவுளில் கூட ஆணாதிக்கமா? எனக்கு எப்போதோ படித்த ஹைக்கூ தான் நினைவுக்கு வருகிறது.

"கிருஷ்ணன் செய்தால் லீலை.
நாங்கள் செய்தால் ஈவ்- டீசிங்கா ?"

மேலே உள்ள விசயங்களில் உள்ள ஆண்களுக்கு என்ன பெயர் தெரியவில்லை?.

சமீபத்தில் தினமலரில் வெளியான செய்தி அனைவரும் அறிந்ததே. சில நடிகைகளை விபசாரம் செய்தார்கள் என்று கூறிய பத்திரிகை , அவர்களிடம் சென்றவர்களை பற்றி எதுவும் வெளியிட வில்லை. அவர்களுக்கு பெயரும் இல்லை. பொதுவாக சினிமா துறையில் உள்ள பெண்களை பற்றி அனைவரும் அறிந்ததே. ஒரு பெண் நடிகையாக வர வேண்டும் என்றால் ,இன்னும் அந்த பெண் யாருடைய வாரிசும் இல்லை என்றால் , அவள் எத்தனை பேருடன் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்ததே. முதல் கொலை செய்யும் போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். போக போக எல்லாம் சரி ஆகி விடும். அது போலதான் இதுவும். தொழில் என்று ஆன பிறகு , அதுவும் பழகிய பிறகு அந்த தொழிலை செய்வதில் (விபசாரதைதான்) எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களை இந்த மாதிரி ஆக்கியதே ஆண்கள் (அனைவரும் இல்லை) தான். அவர்கள் அழைத்து செய்யும் பொழுது விபசாரம் இல்லை. ஆனால் அதுவே அந்த பெண்கள் தனியாக செய்தால் மட்டும் விபச்சாரமா? புரிய வில்லை.

ரஜினி ஒரு பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன்பு , " மது , மாது இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்று கூறியதாக கேள்வி பட்டிருக்கிறேன். இதை ஒரு ஆண் கூறலாம் . இதை பெண் கூறினால், விபச்சாரமா?

சினிமாவில் உள்ள சில பெண்களின் படத்தை மட்டும் பத்திரிகையில் போட்டு இருந்தார்கள். ஆண்களை பற்றி போடுவது என்றால் , 75 % ஆண்களின் போட்டோவை போட வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கிறன்.

ஆக . விபசாரம் என்பதில் எப்போதும் பெண்களை பற்றியே குறை சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை. ஆண்கள் இந்த பெண்களிடம் சென்று படுப்பதை குறைத்தால் , இந்த தொழில் படுத்து போகும் என்பது உண்மை.

ப.பிரதீப்



Thursday, September 24, 2009

படித்ததில் ரசித்தது

வெற்றி ---- இந்த வார்த்தைக்கு பல பேர் பல அர்த்தங்களை சொல்லி இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் கொடுத்த அர்த்தத்தையும் , அதன் விவரிப்பையும் பார்க்கும் பொழுது சற்று நெருடலாக இருந்தாலும் உண்மை என்பது மறுக்க முடியாதது.

:)))))


"Success is just like being pregnant: everybody congratulates you, but nobody knows how many times you were fucked." - Gurnicht Von Nicht (1946-).

Sunday, September 13, 2009

நானும் ஒருவன்







கீழ்வருவன பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து வந்த அதுவும் படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறேன்.

தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அல்லது படிகின்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு வரை எந்த வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதுவரை அவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் தேவை படாது. அதுவரை ஆங்கில தேர்வில வரும் அனைத்து பாடங்களையும் மனபாடம் செய்து ஒட்டி விடலாம். Essay ஆகட்டும் அல்லது வேற ஏதாவது கதை பாடங்களாகட்டும் அனைத்தையும் மனபாடம் செய்து ஓட்டி விடுவோம். கதையை கூட மனபாடம் செய்து எழுதுகிறோமே என்ற குற்ற உணர்வு தோன்றாது அல்லது அந்த கால கட்டத்தில் நமக்கு அந்த எண்ணம் தோன்றவும் தோன்றாது.

ஆனால் அதற்கு பிறகு கல்லூரியில் சென்று சேரும் போதுதான் ஒரு சின்ன ஒரு உணர்வு தோன்றும். பல கல்லூரிகளில் பாட பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில்தான் எடுப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து சென்றவர்களுக்கு கண்ணை கட்டி காற்றில் விட்டது போன்ற உணர்வு தோன்றும். ஆங்கில மீடியத்தில் படித்தவர்களுக்கு இணையாக நம்மால் அங்கு இயங்க முடியாது. கல்லூரி முதல் வகுப்பில் தன்னை அனைவர்க்கும் முன்பு அறிமுகப்படுத்தி கொள்வதில் கூட ஆங்கிலம் நமது வாயில் அந்த ஆட்டம் போடும். அந்த மாதிரி சமயங்களில் ஒருவித தாழ்வு மனப்பான்மை கூட எழும். அப்பொழுதே அதை உணர்ந்து ஓரளவு சரி செய்து கொள்பவர்கள் தப்பிப்பார்கள் . ஏனென்றால் அப்பொழுது ஓரளவு அனைவருமே வகுப்பில் புது மாணவர்களாக இருப்பார்கள். ஆக ஆங்கில அறிவை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் . ஆனால் அதுவே நான்கு அல்லது ஆறு மாதங்கள் ஆகி விட்டால் அதுவும் ஒன்று தோன்றாது. அனைவரும் நண்பர்கள் ஆகி விடுவார்கள். நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தேர்வு சமயத்தில் என்று அதையும் அசால்டாக விட்டுவிடுவோம். ஆக இந்த சமயத்திலும் ஆங்கில் அறிவில் கோட்டை விட்டவர்கள் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.

கல்லூரியும் முடிந்து விட்டது. அடுத்து வேலைக்கு சென்றாக வேண்டும் . இப்பொழுதுதான் நம்முடைய ஆட்கள் வெகுவாக பாதிக்க படுவார்கள். ஆங்கில அறிவின் அருமை இப்பொழுதுதான் புரியும்.

தென் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு , அந்த இடத்தில் பெரிய அளவு அவர்கள் படித்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் இல்லாததால் சென்னை வந்து விடுவார்கள். வந்தாகிவிட்டது. சிறிது காலம் நண்பர்கள் மூலமாக அல்லது வேலை வாய்ப்பு இணைய தளத்தில் தங்களுடைய Resume பதிவேற்றம் செய்து விட்டு அவர்களுடைய தொலைபேசி அழைப்பாக காத்திருப்பார்கள்.அதுவரையில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அதுக்கப்புறம்தான் கூத்தே ஆரம்பிக்கும்.

அழைப்பு எல்லாம் அநியாயத்துக்கு வரும். ஆனால் அங்கு பேசுவதில்தான் பிரச்சினையே. நாம் அங்கு தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசுவதற்குள் நம்முடைய நிலைமை பற்றி தெளிவாக தெரிந்து விடுவதால் அந்த நிலையிலேயே நாம் தவிர்க்க படுவது நமக்கு தெள்ள தெளிவாக தெரியும். எனக்கு தெரிந்து பல நண்பர்கள் பல தேர்வுகளை முடித்து விட்டு கடைசி தேர்வான HR ரௌண்டில் வெளியேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். பின்பு அடிபட்டு அடிபட்டு ஓரளவு தேறி நல்ல நிலையை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.

ஆக இவற்றில் எங்கு பிரச்சினை என்று ஆராய்ந்தால் அடிப்படையே காரணம் என்று தோன்றுகிறது. படித்து முடித்து விட்டு மற்றவர்கள் தங்களுடைய வேலைக்காக அவர்களுடைய துறையில் காலடி வைக்கும பொழுது நாம் ஆங்கில அறிவை தயார் படுத்தி கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் மிகை ஆகாது. குழந்தைகள் தங்களுடைய பத்து வயதிற்குள் பல மொழிகளை கற்கும் திறன் இருக்கிறதாம். ஆக அடிப்படையிலேயே இதை தீர்மானித்து விடோம் என்றால் எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் இல்லை.

எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். வட இந்தியர்களிடம் இந்த மாதிரியான பிரச்சினையே பார்த்ததே இல்லை. நமது தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் தமிழ் என்று கூறி கொண்டு ஆங்கில மற்றும் ஹிந்தி முதலான மொழிகளுக்கு முன்னிரிமை அளிக்காமல் விட்டு விடுகிறோம்.
ஆக இனிவரும் காலங்களில் அடுத்த சந்ததியினரையாவது ஆங்கில மீடியத்தில் சேர்த்து ஆங்கில அறிவை ஏற்ற வேண்டும் அல்லது நம்முடைய அரசாங்கம் தமிழ் மீடியத்திலும் அதன் திறனை உயர்த்த வேண்டும்.

கடைசியாக, மொழி என்பது ஒருவருடைய கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்த்து கொள்ளும் ஒரு ஊடகமே தவிர அதுவே அனைத்திற்கும் மேல் என்று கூறி கொண்டு அடித்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது.
நமது தாய் தமிழ் மொழியின் தரம் எப்பொழுதும் குறைந்து போக போவதில்லை மற்ற மொழியை நாம் பயில்வதால்.

ப.பிரதீப்