Sunday, May 20, 2012

ஜாதியும் .....தோஷங்களும்

நபர் 1 : அந்த பொண்ண ஏன்டா வேணாம்னு சொல்லிட்ட?
 நபர் 2: அது sc பொண்ணுன ...அதான் வேணாம்னு சொல்லிட்டேன்


 ரோட்டில் கடந்து போகின்ற பொழுது கேட்ட உரையாடல் இது. திரும்பி கேட்க வேண்டும் என்று தோன்றியது " ஏன் sc பொண்ணுனா அவங்களுக்கு உணர்ச்சிகள் கிடையாதா அல்லது மேட்டர் இல்லையான்னு" . தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது ஏதாவது ஒரு தனிப்பட்ட தேவைக்காகவோ இன்னமும் இந்த ஜாதியை பிடித்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.வயதானவர்கள் இதை சொன்னாலும் பரவாயில்லை ஆனால் இன்றைய இள வயதினரும் இதை சொல்லி கொண்டு அலைவதுதான் வருத்தமான செய்தியாக உள்ளது. அந்த அளவுக்கு அவர்களுக்கும் இள வயதிலிருந்தே ஜாதியை ஊற்றி வளர்த்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.


 இந்தியாவிலிருந்து நிலாவிற்கு மனிதனை அனுப்பினால் கூட ஜாதி ஒதுக்கீடு செய்துதான் இந்தியா அனுப்பும் என்று பலர் தங்களது வெறுப்பை காமித்து கொண்டு இருக்கிறார்கள். வரவேற்க தக்கது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே வேளையில் இவர்களிடம் ,ஜாதி இல்லை என்று கூற சொல்லுங்கள். சொல்ல மாட்டார்கள். ஆக கீழே இருப்பவர்கள் கீழேயே இருக்க வேண்டும், மேலே வந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் இவர்களை எடுத்து கொள்ளலாம். கீழே உள்ளவர்கள் மேலே வர வேண்டும் என்பதின் ஒரு நோக்கம் தான் இந்த ஜாதி ஒதுக்கீடு.ஆக இதை வேண்டாம் என்று சொல்பவர்கள் ஜாதியும் இல்லை என்று சொன்னால் நன்றாக இருக்கும். அப்போது இவர்கள் ஜாதி ஒதுக்கீடை எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கும்.


ஜாதி, மதம் என்று நான் வேண்டாம் என்று சொன்னாலும் நானும் ஒரு வகையில் இதை வளர்ப்பதில் ஒரு மறைமுக ஒரு பங்கை எடுத்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நினைக்கிறன்.  அதாவது , ஒரு குழந்தை படித்து முடித்து எந்த துறையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் முடிவு எடுப்பதை விட அந்த மாணவன் தேர்ந்து எடுத்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை ஓரளவு நாம் ஒத்து கொள்கிறோம். அவன் துறையை தேர்ந்து எடுப்பதில் சரி. ஆனால், அவன் எந்த மதத்தை தேர்ந்து எடுக்க வேண்டும் அல்லது எடுக்க கூடாது  என்பதை நாம் அவனிடம் கேட்காமலே சிறு வயதிலேயே அவனுக்கு திரித்து விடுகிறோம். ஒரு கிறிஸ்தவனுக்கு ஒரு பாதிரியார் , திருமணம் செய்து வைக்கும் பொழுது உனக்கு சம்மதமா என்று இருவரிடமும் கேட்டு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் பிறந்தவுடன் எடுக்கும் பப்டிசம் அவனுடைய  சம்மதத்தை கேட்காமலேயே அவனுக்கு நீ இந்த மதத்தைதான் நம்ப வேண்டும் என்று சொல்லி விடுகிறோம். இது எந்த விதத்தில் சரி? இது போன்று ஒவ்வொரு மதத்திலும் ஒரு சம்பிரிதாயம். இது சரியா என்பது கேள்விக்குறியே. சாதியற்ற , மதமற்ற ஒரு மனிதனை உருவாக்கி , அவன் பக்குவம் அடைந்த பிறகு அவனுடைய போக்கில் விட்டு , உனக்கு மதம் பிடித்தால் அதை பின்பற்று. இல்லை என்றால் மதமற்ற வாழ்கை வாழ் என்று கூறினால்.....அது சரி என்று தோன்றுகிறது. !!!!


 அது போல இந்த numerlogy காரர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை. வர வர குழந்தை நமக்கு பிறகிறதா அல்லது numerlogy காரர்களுக்கு பிறகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும், என்ன கலர் அவர்களுக்கு ஒத்து போகும் , எந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்பதை கூட அவர்கள்தான் உறுதி செய்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒரு வேலையும் இல்லை குழந்தை பெற்று கொள்வதை தவிர்த்து. நண்பர் ஒருவர் புலம்பி கொண்டு இருந்தார், குழந்தைக்கு இந்த பெயர் வைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் வைக்க முடிய வில்லை. அந்த பெயர் வைக்க கூடாது என்று numerlogist சொல்லி விட்டார் என்று. சுத்த முட்டாள் தனமாக இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ , பிறப்பிலேயே அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்க நாம் வழி செய்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. பெயரில் என்ன இருக்கிறது? நமக்கு ஒரு பெயர் பிடித்து விட்டால் கண்டிப்பாக வைத்து விட வேண்டும், அது எந்த மதத்தின் பெயராக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி.


 இவர்கள் ஒரு பக்கம் என்றால், அடுத்தது இந்த ஜோசிய காரர்கள் தொல்லை. பிறந்த நேரத்தை வைத்து , குழந்தையின் ஜாதகத்தை கணிக்கிறேன் என்று சொல்லி இவர்கள் படுத்தும் பாடு பெரும்பாடு. சமீபத்தில் அண்ணனுக்கு குழந்தை பிறந்தது. அது சிறிய மருத்துவமனை என்பதால் குழந்தை பிறக்கும் பொழுது அழுகும் சத்தம் தெளிவாகவே கேட்டது.சரி என்று என் கடிகாரத்தில் நேரத்தை பார்க்கும் பொழுது அதில் ஒரு நேரம் காட்டியது. என் அப்பா கடிகாரத்தில் ஒரு நேரம் காட்டியது. சரி இந்த இரண்டு நேரத்தில் எதை எடுத்து கொள்ளலாம் பிறந்த நேரமாக என்று யோசிக்கும் பொழுது நர்ஸ் வந்து ஒரு நேரத்தை சொன்னார். என்னவென்று பார்த்தல் மருத்துவமனையில் ஒரு நேரம் காட்டுகிறது. இதில் எந்த நேரத்தை அடிப்படையாக வைத்து ஜோசிய காரர்கள் குழந்தைக்கு ஜாதகம் கணிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே கணித்தாலும் அது எந்த அளவுக்கு உண்மை ஆக போகிறது என்றும் தெரியவில்லை.




 அப்படியே சரியான குழந்தை பிறந்த நேரத்தை கணித்து விட்டாலும் , குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரியா என்றும் யோசிக்க வைக்கிறது.குழந்தை தாயின் வயிற்றிலும் உயிரோடுதான் இருக்கிறது. ஒரு உயிர் உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரி. ஆனால் அதை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.ஆக ஆணும் பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொன்னால் சரி.அது இல்லாமல் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது என்பது சரியான முறை அல்ல என்றே தோன்றுகிறது. ஆக ஜாதகம் பொய் என்பதே என்னுடைய கணிப்பு.




 இதிலும் இன்னொரும் விஷயம் இன்னும் காமெடி ஆகத்தான் இருக்கிறது. ஜாதகம் கணித்து குழந்தைக்கு செவ்வாய் தோஷம் , புதன் தோஷம் என்று சொல்வது. அப்படியே தோஷம் இருக்கிறது என்று சொன்னாலும் , அதற்கு பரிகாரம் செய்தால் சரி ஆகி விடும் என்பது. கோயிலுக்கு சென்று சில சம்பிருதாயங்கள் செய்தால் சரி ஆகி விடும் என்பதும், சில தோஷத்திற்கு இரண்டு கல்யாணம் நடக்கும், அதில் இரண்டாவதுதான் நிலைக்கும் என்றால் முதல் தாலி வாழை மரத்திற்கு கட்டி அதை வெட்டுவது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பரிகாரம் செய்து நாம் யாரை சந்தோஷ படுத்துகிறோம் , யாரை சந்தோஷ படுத்துவதினால் இந்த தோஷம் மறைகிறது. கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். நாம் முட்டாளா அல்லது பரிகாரம் செய்து நாம் சந்தோஷ படுத்துகின்ற அந்த கடவுளா அல்லது கோள்களா ? இந்த தோஷத்தில் உள்ளவர்கள், தோஷம் இல்லாதவர்களோடு இணைந்தால் இருவரில் யாரவது ஒருவர் இறந்து விடுவார் என்றெல்லாம் கேள்வி படுகிறோம். இந்த இணைவது என்பது திருமணம் செய்து இணையும் போதுதான் பலிக்குமா ? ஏனென்றால் எத்தனையோ பேர் விலை மாதர்களிடம் செல்கிறார்கள். அவர்களிடம் செல்லும் போது நாம் தோஷம், ஜாதகம் விசாரித்தா செல்கிறோம் ? அப்படி அவர்களிடம் இந்த தோஷம் இருந்தால் என்ன ஆகும்? அப்போது இதெல்லாம் "பலி"க்காதா ? தோஷம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் கண்டிப்பாக ஏமாற்றுவேலைதான்.




 ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு குழந்தை ஒரு வீட்டில் பிறக்கிறது என்றால் ஒரு தோஷம் கண்டிப்பாக வரும்.அதை நான் ஏற்று கொள்கிறேன். அது சந்"தோசம்".

No comments:

Post a Comment